Friday, January 6, 2012

கண்களாகும் கைகள்: லுயி பிரெயில்- II

இன்று லுயி பிரெயில்ன் இறந்த நாள். கண்களற்ற மனிதர்கள் படிக்கவும் எழுதவும் ஒரு வழியை உருவாக்கி தந்த அவர், தனது 45வது வயதில் இறந்தார். இந்த பதிவில் அவர் உருவாக்கி தந்த பிரெயில் எழுத்துமுறை பற்றி சிறிது பாப்போம்.

பிரெயில் எழுத்துமுறையின் தோற்றம் பற்றி எனது முதல் பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். லுயி பிரெயில் நைட் ரைட்டிங் எனும் முறையில் சில மாற்றங்களை உருவாக்கி அதனை   எளிதாக  மாற்றினார்.   லுயி பிரெயில் பிரெஞ்சு  எழுது  முறையில் உள்ள  ஒவ்வொரு  எழுத்துக்கும்  ஒரு குறியீட்டினை  உருவாக்க முயற்சி  செய்தார். முதலில்  அவர் எடுத்துக்கொண்டது  ஆறு  புள்ளிகள். இந்த குறியீடுகள் 1245  ஆகிய புள்ளிகளை மட்டுமே பயன் படுத்தின. ஆறு புள்ளிகளும் மேலிருந்து கீழாக, 1 முதல் 6 வரை குறிக்க பட்டன.அதில்  அவர் a-j  வரை  உள்ள  எழுத்துக்களுக்கு  தனி  தனி குறியீட்டினை அளித்தார். அவை எண்களுக்கும் பயன்படுத்த பட்டது. ஒரு குறியீடு எழுத்தை குறிக்கிறதா அல்லது எண்களை  குறிக்கிறதா என்று குறிப்பிடுவதற்கு ஒரு தனி குறியீட்டினை பயன் படுத்தினார்.  அடுத்த பத்து எழுத்துகளுக்கு அவர் மேலிருந்த அதே குறியீடுகளை 3வது இடத்தில மட்டும் ஒரு புள்ளி வைத்து பயன் படுத்தினார். அடுத்து உள்ள எழுத்துகளுக்கு 6ம் இடத்தில் புள்ளி சேர்க்கபட்டது. 
லுயி பிரெயில் உருவாக்கிய முறையில் தனி குறியீடுகளுக்கும் இடம் இருந்தது. ஆனால் பின் நாட்களில் சுருக்கெழுத்து முறையும் உருவாக்கபட்டு பயன்படுத்தபடுகிறது. அதே போல் எழுத்துகளுக்கு என்று இல்லாமல் இசை கோர்வைகளுக்கு என்று தனி முறை உருவாக்க பட்டுள்ளது. பல நாடுகள் தங்களது ரூபாய் நோட்டுகளில் பார்வையற்றவர்கள்  பயன்படுத்துமாறு இந்த முறையினை உபயோகிக்கிறார்கள். கனடாவில் அதிகமானோர் பிரெயில் முறையை உபயோகிக்கவில்லை என தெரிந்து வேறு முறை பயன்படுத்தபடுகிறது. இந்தியாவில் நமது நாட்டின் சட்ட திருத்தங்கள் சில பிரெயில் முறையில் வெளியிடப்பட்டுள்ளன.

Wednesday, January 4, 2012

கண்களாகும் கைகள்: லுயி பிரெயில் - I

எங்களுக்கு தேவை உங்களின் பரிதாபமோ அல்லது நாங்கள் தாக்குதலுக்கு உள்ளாக கூடியவர்கள்  எனும் நினைவூட்டுதலோ அல்ல. நாங்கள் சமமானவர்களாக நடத்தப்பட வேண்டும் - கருத்து பரிமாற்ற திறன் மட்டுமே எங்களுக்கு அதனை பெற்று தரும். 
                                                                                          - லுயி பிரெயில்

மேற்கண்ட வாசகங்கள் பார்வை அற்றவர்களுக்கான எழுத்து முறையை அறிமுகபடுத்திய லுயி பிரெயில் என்பவரின் வார்த்தைகள். அவரின் எண்ணங்கள் இன்று ஓரளவுக்கு நிறைவேறி உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இன்று லுயி பிரெயில்ன் பிறந்த நாள்.
லுயி பிரெயில் சிறு வயதில் அதிகமானோரை போலவே சரியான கண் பார்வை உடன் தான் வளர்ந்தார். அவருடைய மூன்றாவது வயதில் ஒரு நாள் தான் தந்தையின் தொழிற்கூடத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது அவர் கண்களில் ஒரு கூறிய கருவியினால் காயம் ஏற்பட்டது. உடனே எடுத்து சென்று மருத்தவரிடம் காண்பித்த போதும், கண் மருத்துவரிடம் காண்பிக்கப்பட்ட போதும் கூட காயம் குணமாகவில்லை. மேலும் அந்த காயம் பயங்கரமான வலி ஏற்படுத்தியதுடன் அடுத்த கண்ணின் பார்வையையும் பறிக்க ஆரம்பித்தது.

லுயி பிரெயில் அப்படியும் துவண்டு விட வில்லை.தன் தந்தை ஏற்படுத்தி தந்த உன்றுகோலுடன்  பல இடங்களுக்கும் சென்று வந்துள்ளார். அந்த சமயத்தில் அவருக்கு தெரிந்த ஒருவர் கல்வி கற்குமாறு உற்சாகபடுத்தியுள்ளார். அதன் பயனாக வலேண்டின் ஹுஅய் என்பவர் ஏற்படுத்திய பார்வையற்ற குழந்தைகளுக்கான தேசிய நிறுவனம் எனும் பள்ளியில் சேர்ந்தார். அங்கு வலேண்டின் ஹுஅய் ஏற்படுத்திய புது விதமான முறையில் கல்வி கற்பிக்க பட்டது. இந்த முறையில் லத்தின் எழுத்துக்கள் கைகளால் தொட்டு பார்த்து உணரும் அளவில் அச்சு செய்யப்பட்டன. இந்த முறையில் சில சிக்கல்கள் இருந்தாலும் கூட அந்த கால கட்டத்தில் வேறு எந்த ஒரு வழியும் இல்லாததால் இந்த முறையே பின்பற்றப்பட்டது. லுயி பிரெயில் அங்கேயே கல்வி கற்று அதே பள்ளியில் ஆசிரியராக வேலையும் செய்ய ஆரம்பித்தார்.

லுயி பிரெயில்

இந்த சமயத்தில் தான் சார்லஸ் பார்பியர் லுயி பிரெயில்ஐ வந்து சந்தித்தார். அவர் முக்கியமாக வந்தது தான் உருவாக்கிய ஒரு எழுத்து முறையை பற்றி பேசுவதற்காக. சார்லஸ் பார்பியர் ராணுவ வீரர்கள் பேசாமலும், ஒளியின் துணை இல்லாமலும் படித்து அறியும் முறை ஒன்றை உருவாக்கி இருந்தார். அதில் அவர் 12 புள்ளிகளையும் சில கோடுகளையும் பயன் படுத்தி இருந்தார். அனால் அந்த முறை மிகவும் கடினமானதாக இருக்கிறது என்று இராணுவத்தினரால் நிராகரிக்க பட்டது. அந்த முறையை எல்லோரும் நைட் ரைட்டிங் என்று அழைத்தனர். லுயி பிரெயில் அந்த முறையில் இருந்த சில கடினமான சங்கதிகளை நீக்கி  பிரெயில் முறையை அறிமுகப்படுத்தினார்.

பிரெயில் முறையில் ஆங்கில எழுத்துரு
பிரெயில் முறையில் லுயி பிரெயில்ன் பெயர்












 அடுத்த பதிவில் பிரெயில் எழுத்து முறையை பற்றி பாப்போம்.

Tuesday, January 3, 2012

ஆயிரம் ஜென்மங்கள் எடுக்க தயார் ......

உன் மடியில்
படுத்துறங்க மட்டுமே
ஆயிரம் ஜென்மங்கள்
எடுக்கத் தயார்.

நீ செல்லமாய்
காது திருக மட்டுமே
ஆயிரம் ஜென்மங்கள்
எடுக்கத் தயார்.

தவறுகளுக்கு உன்னிடம்
அடிவாங்க மட்டுமே
ஆயிரம் ஜென்மங்கள்
எடுக்கத் தயார்.

உன்னை செல்லம்
கொஞ்ச மட்டுமே
ஆயிரம் ஜென்மங்கள்
எடுக்கத் தயார்.

உன் கையால்
சாப்பிட மட்டுமே
ஆயிரம் ஜென்மங்கள்
எடுக்கத் தயார்.

உன்னை ஆசையாய்
காதலிக்க மட்டுமே
ஆயிரம் ஜென்மங்கள்
எடுக்கத் தயார்.

அம்மா....
நீ எனக்கு தாயாக
கிடைப்பாயானால் மட்டுமே
ஆயிரம் ஜென்மங்கள்
எடுக்கத் தயார்.





Monday, January 2, 2012

புது வருட உறுதிமொழிகள்

சென்ற வருட உறுதிமொழிகளை அப்படியே திரும்பவும் எடுக்க உள்ளேன், மற்றும் சில எண்ணங்களுடன். சென்ற வருடம் எனது உறுதிமொழிகள் நான்கு. முதலாவது அதிகமாக இடுகைகள் எழுதுவது பற்றியது. 2010 ல் இருந்ததை விட இப்போது சிறிய முன்னேற்றம். 2008 இடுகைக்கு பிறகு 2011ல்  தான் எனது இரண்டாவது பதிவு இருந்தது. ஆனால் 2011 ல் பத்து பதிவுகள் எழுதியுள்ளேன். மாசத்துக்கு ஒன்று கூட எழுதவில்லை என்றாலும் ஒப்பீட்டு அளவில் முன்னேற்றம் என்று தான் கொள்ளவேண்டும். முழு வெற்றி இல்லை என்பதால் அப்படியே தொடர்கிறது இந்த வருடத்திற்கும்.


இரண்டாவது உறுதிமொழி டயரி எழுதுவது பற்றியது. அதில் எந்த முன்னேற்றமும் இல்லை அப்படியே தொடர்கிறது. மூன்றாவது உறுதிமொழி கேலி கூத்தாகிவிட்டது. ஒரு அடி கூட நகரவில்லை. கதைகள் எழுத வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் ஒரு வெள்ளை காகிதத்தில் 'அ' கூட போடவில்லை. ஆகவே இந்த வருடமும் இரண்டு உறுதிமொழிகளும் தொடர்கின்றன.

நான்கவதாக எடுத்து கொண்ட உறுதிமொழி வளரும் தொழில்நுட்பங்கள் பற்றி தெரிந்து கொள்வது.இதில் கட்டாயம் வெற்றி பெற்றேன் என்றே சொல்ல வேண்டும்.மெகா கணினியம் பற்றி தெரிந்து கொண்டேன். மேலும் பல தொகுப்பு வலை தளங்களை பின்பற்றி சிறிதளவு முன்னேற்றம் அடைந்தேன். அகவே இந்த உறுதிமொழி வெற்றி பெற்றதாகவே கொள்ள வேண்டும். அதனால் இந்த உறுதிமொழி முன்னேற்றம் அடைகிறது. நீண்ட நாட்களாக நான் படித்து தெரிந்து கொள்பவற்றை மாணவர்களுக்கு சென்று சேர்க்கும் வகையில் ஒரு மின் பத்திரிக்கை தொடங்க வேண்டும் என்பது எனது எண்ணம். ஆனால் அது இழுத்து கொண்டே போகிறது. அகவே அதனை தொடங்கி வெற்றி பெற செய்ய வேண்டும் என்பது புது உறுதிமொழி.

அதை போல் இந்த வருடத்தில் ஆராய்ச்சி படிப்பில் என்னை பதிவு செய்து கொள்ள வேண்டும். அதற்க்கு தேவையான முன்னேற்பாடுகளை தொடங்கி சோம்பல் இல்லாமல் செய்ய வேண்டும் என்பது அடுத்த உறுதிமொழி. பாப்போம் ஒரு வருடம் கழித்து.

 

Wednesday, November 30, 2011

கேள்விக்குள்ளாகும் மக்களாட்சி: பிரதிநிதிகள் சபையில் மக்களின் பங்கு


நமது நாடு உலகின் மிகப்பெரிய மக்களாட்சி என அழைக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் நாம் ஒரு மக்களாட்சியில் இருப்பதாக உணர்கிறோமா எனும் கேள்வி பல தடவை எழுந்தது உண்டு. லோக்பால் மசோதா பிரச்சினைகளின் போது அடிக்கடி நான் கேட்ட ஒரு சொற்றொடர் " மக்கள் பிரதிநிதிகளை தவிர வேறு யாரும் என்ன சட்டம் வேண்டும் என வலியுறுத்த முடியாது" என்பது. அதன் தொடர்ச்சியாக எனக்குள் எழுந்த எண்ணங்களின் பதிவு இது.


ஒரு மக்களாட்சி என்பது மக்களுக்காக, மக்களால், மக்களை கொண்டு நடத்தப்படும் ஒரு ஆட்சி என்பது அனைவரும் கூறும் விளக்கம். இப்போது இங்கு தான் சில பிரச்சனைகள் வருகின்றன. நமது மக்களாட்சி பொது மக்களை அங்கமாக கொள்ளாமல், பிரதிநித்துவ முறையில் அமைந்தது. அதாவது, ஒரு பகுதியில் இருக்கும் மக்களின் பிரதிநிதியாக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் அந்த மக்களின் சார்பாக எல்லா முடிவுகளையும் எடுக்கிறார்.


முதலாவது பிரச்சனை தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதி சார்ந்தது. அந்த பிரதிநிதியை அந்த குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் அணைத்து மக்களும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கவில்லை. மாறாக அதிகமான மக்கள் ஓட்டளித்த ஒருவர் தேர்ந்தேடுக்கபடுகிறார். இவர் எப்படி தனக்கு எதிராக ஓட்டளித்த மக்களின் பிரதிநிதியாக செயல்பட முடியும். இந்த தேர்வு சரி என்று வாதாடினால் எதிராக வாக்களித்த மக்களும் அவர்கள் எண்ணங்களும் கணக்கில் இல்லாமல் போய்விடும். 


இரண்டாவது, எந்த ஒரு பிரதிநிதியும் தனக்கு என்று தனி கொள்கைகள் கொள்வது இல்லை. ஒரு கட்சியின் கொள்கைகளே அவர்களின் கொள்கைகள். தனியராக நிற்கும் ஒருவர் தன் கொள்கைகள் இன்னவை என மக்களுக்கு உணர்த்துவது கடினம். அதே போல் தேர்தலின் போது இருக்கும் பிரச்சினைகளுக்கு மட்டுமே கொள்கைகள் உருவாக்க படுகின்றன. அதற்க்கு மட்டுமே மக்கள் தங்கள் பிரதிநிதியாக யாரை தேர்ந்தெடுக்கலாம் என முடிவு செய்ய முடிகிறது. இடையில் ஒரு பிரச்சினை வரும் போது மக்களின் உணர்வுகள் எப்படி இருந்தாலும் கட்சிகள் என்ன நிலை எடுக்கின்றனவோ அதுவே மக்களின் பிரதிநிதுவமாக பதியப்படுகிறது. 


மூன்றாவது, ஏதேனும் ஒரு சமயம் மக்கள் தங்களின் கருத்துக்களை வெளிபடுத்த வேண்டும் என்றால் அதற்க்கு நேரிடையான ஒரு வழியும் கிடையாது. ஊடகங்களும், கட்சிகளின் எண்ணங்களும், செல்வாக்கு மிகுந்த வியாபாரிகளின் கருத்துக்களுமே போது மக்களின் கருத்துக்களாக பதியப்படுகின்றன. 


இப்படி இருக்க நாம் எப்படி ஒரு மக்களாட்சி நடக்கும் நாட்டில் இருக்கிறோம் என்று கூற முடியும். நம்மை ஆட்சி செய்பவர்கள் தவறு செய்தாலும் அவர்களாகவே தங்களை தண்டித்து கொள்ள வேண்டும் என்று ஏமாந்து காத்திருக்கிறோம். அல்லது அவர்களின் எதிர்கருத்து கொண்டவர்கள் ஆட்சிக்கு வந்து அவர்களை வதைத்து அவர்கள் கொண்டுவந்த திட்டங்கள் நல்லவையா கெட்டவையா என ஆராயாமல் எதிர் அணியினரின் திட்டம் என்பதற்காகவே மாற்றி அமைப்பதை வாய் பொத்தி பார்த்திருக்கிறோம்.
இதற்கு எனக்கு தோன்றிய ஒரு முக்கியமான தீர்வு, முக்கியமான சட்டங்கள் நிறைவேற்றப்படும் போது மக்களை அந்த சட்ட வடிவமைப்பில் நேரடி பங்கு கொள்ளவைப்பது, மற்றும் அந்த சட்டங்கள் வேண்டுமா வேண்டாமா எனும் முடிவை மக்களிடம் இருந்து நேரடியாக பெறுவது ஆகும். இந்த முறை சுவிச்சர்லாந்து நாட்டில் நடைமுறையில் இருக்கிறது என்று எங்கோ கேள்விப்பட்டதாக ஞாபகம்.இதிலும் பல பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் மாற்றங்களை செயல்படுத்தி பரிசோதிக்கும் போது பல பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு கிடைக்கும்.








Monday, June 13, 2011

கல்வி = அறிவு; கல்வி != வேலை

கடந்த சில நாட்களாக சமச்சீர் கல்வி பற்றி நடந்து வரும் விவாதங்களை கவனித்து வந்த போது, நான் கல்வியை பற்றி வைத்திருக்கும் சில கருத்துக்களை பகிர்ந்துகொள்ள எண்ணியே இந்த பதிவு.

நான் பட்ட படிப்பை முடித்து ஒரு கல்லூரியில் வேலை செய்ய ஆரம்பித்ததில் இருந்ததே சில முரண்பாடுகளை கவனித்து வந்துள்ளேன், அது தான் இந்த பதிவின் தலைப்பு. இதற்கு நானும் விதிவிலக்கல்ல. படிக்கும் மாணவர்கள் அனைவருக்குமே கல்வி என்பது வேலை வாங்குவதற்கு ஒரு கருவி அல்லது ஒரு வழி. யாருமே கல்வியினை அறிவை வளர்த்துக் கொள்ள ஒரு வழியாக தேர்ந்தெடுப்பது இல்லை. மாணவர்களிடமும், பள்ளி கல்வி முடித்து கல்லூரியில் சேரும் நிலையில் உள்ள மாணவர்களின் பெற்றோரிடமும் சாதரணமாக நான் எதிர்கொள்ளும் கேள்விகள்.

1. எத்தனை மார்க் எடுத்தால் மென்பொருள் நிறுவனங்களில் வேலை கிடைக்கும்?

2. எந்த மென்பொருளை கற்றுக்கொண்டால் எளிதாக வேலை கிடைக்கும்?

3. எந்த கல்லூரியில் படித்தால் எளிதாக வேலையில் சேரலாம்?

4. எந்த பாடப்பிரிவிற்கு வேலைகள் அதிகமாக உள்ளன?

நான் மேற்கண்ட கேள்விகள் அபத்தமானவை என்றோ அல்லது தேவையற்றது என்றோ எண்ணவில்லை என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். கட்டாயம் மிகசிறந்த நிறுவனத்தில் வேலை செய்வதும் , கை நிறைய சம்பாதிப்பதும் நாம் நினைத்த மாதிரி வாழ தேவை தான். ஆனால் கல்வி கற்கும் பருவத்தில் கல்வியினை நம் அறிவை வளர்த்துக்கொள்ள என எண்ணாமல் வேலை வாங்குவதற்கு என எண்ணுவதே மேற்கண்ட கேள்விகள் எழ காரணம். முன் காலங்களில் கல்வி, அறிவை வளர்க்க என்றே பொருள்பட்டது. ஆனால் இப்போது அப்படி இல்லை.

இதனை சரிசெய்ய நாம் கல்வி கற்பிக்கப்படும் முறை , மற்றும் மாணவர்களின் அறிவை சோதிக்கும் முறை ஆகியவற்றையே மற்ற வேண்டும் என்பது எனது எண்ணம். இவற்றை மாற்றாமல் நாம் பாடத்திட்டத்தை மாற்றுவதில் எந்த பயனும் இல்லை. ஏனெனில் பாடத்திட்டம் மாறினாலும் கல்வி கற்கும் முறை மாறவில்லை.

கல்வி கற்பிக்கும் முறை பற்றி முதலில் எடுத்துக் கொள்வோம். இன்று பள்ளிகளிலும், கல்லூரியிலும் கல்வி கற்பிக்க படுவதில்லை, ஒப்பிக்கப்படுகிறது. ஆசிரியர் பாடப்புத்தகத்தில் இருந்து தான் மனப்பாடம் செய்தவற்றை அப்படியே வகுப்பில் ஒப்பிக்கிறார். மாணவன் வீட்டில் வந்து அதனை மனப்பாடம் செய்கிறான். இதன் மூலம் அவன் படித்திருப்பான் ஆனால் புரிந்திருக்க மாட்டான். இதற்கு விதிவிலக்காக இருக்கும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.

இரண்டாவதாக மாணவனின் அறிவினை சோதிக்கும் முறை. ஒரு மாணவன் சில கேள்விகளை படித்து விட்டு தேர்வுக்கு செல்கிறான். அன்று அந்த கேள்விகள் வினாத்தாளில் இருந்தால் அவன் அதிக மதிப்பெண்களை பெற்றுவிடுவான். அதற்கு நேர்மாறாக இருந்தால் குறைந்த மதிப்பெண்கள் பெறுவான் அல்லது தேர்வில் தோல்வி அடைவான். ஆக அவனது அதிர்ஷடம் அன்று எப்படி இருந்தது என்பதினை பொறுத்தே அவனது தகுதி சோதிக்கபடுகிறது. மென்பொருள் நிறுவனங்கள் ஒரு மாணவனின் கல்லூரி மதிப்பெண்களை வைத்து மட்டுமே யாரையும் வேலைக்கு எடுப்பது இல்லை , மாறாக தனியாக தேர்வுகள் நடத்தி அதன் மூலமே தேர்ந்தெடுக்கின்றனர். அதே போல் சில வருடங்களாகவே நாட்டின் பட்டதாரிகளில் இருபத்தி ஐந்து சதவிகிதத்தினர் மட்டுமே வேலைக்கு தகுதியனவர்களாக இருக்கிறார்கள் எனும் கூற்றினை செய்திதாள்களில் படித்திருக்கலாம். இவை இரண்டும் நம் தேர்வு முறைகளின் தோல்வியை மட்டுமே தெரிவிக்கின்றன.

இதை போலவே இன்னும் நிறைய காரணிகள் இருக்கின்றன. அவற்றை மாற்றாமல் பாடதிட்டத்தினை மற்றும் மாற்றுவதால் எந்த பயனும் இல்லை என்பதுவே எனது எண்ணம்.

Monday, January 31, 2011

போராட்டங்களும் அதன் பாதிப்புகளும்

நான் திருச்செந்தூர் அருகில் இருக்கும் ஒரு கல்லூரியில் வேலை செய்கிறேன். கல்லூரி என்றவுடனே நம் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது, பசுமையான நினைவுகள் தான். அதே போல் மாணவர்களுக்கு சிறிது சுதந்திரம் இருக்க கூடிய கல்லூரிகளில், படித்தவர்களுக்கு அவர்கள் செய்த போராட்டங்களும் நினைவுக்கு வரும். ஆனால் இந்த பதிவு அந்த போராட்டங்களை பற்றியது இல்லை. மாறாக, சமுகத்தில் நடக்கும் ஒரு போராட்டம் எந்த அளவிற்கு மாணவர்களின் அன்றாட நடவடிக்கைகளை பாதிக்கிறது என்பதை பற்றியதே இந்த பதிவு.

சமீபத்தில், எதோ ஒரு பிரச்சினையினால் திருசெந்தூரில் இரண்டு நாட்கள் மதிய நேரங்களில் சிறிது பதற்றம் நிலவியது. அந்த சமயங்களில் எங்கள் கல்லூரிக்குள் நிலவிய பதற்றம் மிகவும் அதிகம். ஒவ்வொருவரும் வேறுமாதிரியான பதற்றங்களில் இருந்தார்கள். அருகிலே இருந்து வரும் ஆசிரியர்கள், தங்கள் குழந்தைகளின் பள்ளிகள் அனைத்தும் விடப்பட்டன என அறிந்தவுடன் குழந்தைகளை பற்றி கவலைப்பட ஆரம்பித்து விட்டனர். அதே போல் எங்கள் கல்லூரி பேருந்துகளின் ஒருங்கிணைப்பாளர் பேருந்துகளின் பத்திரம் பற்றியும், பேருந்துகளை எந்த வழியில் அனுப்புவது, திருச்செந்தூரில் இருந்து வரும் மாணவர்களை எப்படி கொண்டு சேர்ப்பது என்பது பற்றியும் வருத்தப்பட ஆரம்பித்து விட்டார்.

இதே போல் இன்னும் பல விதமான வருத்தங்கள் இருந்தாலும், குறிப்பாக நான் அதிகமான வருத்தத்தினை, வருத்தம் என்பதை விட பயம் என்று குறிப்பிடலாம், நான் கண்டது கல்லூரி பேருந்துகளை பயன்படுத்தாமல் தனியார் மாற்றும் அரசு பேருந்துகளில் வரும் மாணவர்களின் கண்களில் தான். சிறு பிரச்சினை என்றாலே நமது அரசு பேருந்துகள் நின்று போகும், தனியார் பேருந்துகள் சில ஓடினாலும் ஏற முடியாத அளவு கூட்டம் இருக்கும். ஆனால் அன்று நாங்கள் கேள்விப்பட்டது, எந்த பேருந்துகளும் ஓடவில்லை என்பது தான். நினைத்து பாருங்கள். அந்த மாணவர்களில் பலர் இரண்டு மூன்று பேருந்துகள் மாறி செல்ல வேண்டியது உண்டு. இவர்களால் செல்ல முடியாது என்பதை போல் பெற்றோருக்கு தகவல் சொன்னால் அவர்களும் வந்து அழைத்து செல்ல முடியாது. தனி வாகனங்கள் வைத்திருக்கும் பெற்றோர் மட்டுமே வந்து அழைத்து செல்ல முடியும்.

இந்த பிரச்சினை இருந்ததால் சில மாணவர்கள் பேருந்து ஓடவில்லை என்றதுமே கவலையில் ஆழ்ந்து விட்டனர். அவர்கள் பாடத்தினை கவனிப்பது நின்று போனது. இரண்டாம் நாளிலும் இதே போல் செய்தி வர கல்லூரி இடையில் விடப்பட போவதாக தகவல் வந்தது. அந்த நொடியே ஒரு மாணவி தனது புத்தகத்தினை மூடி பையை கிளம்ப தயார் செய்து விட்டார். அப்படியானால் இது வரை நான் நடத்திய எதையுமே அந்த மாணவியால் கவனித்து இருக்க முடியாது.

இதே போல் அனைவருக்கும் ஒரு சம்பவம் நடந்து இருக்கலாம். நியாமான போரட்டங்கள் செய்ய வேண்டி இருந்தாலும் கூட இவ்வாறு முன்னறிவிப்பில்லாமல் நடக்கும் போராட்டங்கள் பலருக்கு பாதிப்பை உண்டு பண்ணுகின்றன. ஆனால் இதனை எவருமே உணர்ந்ததாக தெரியவில்லை. நமது சனநாயகத்தின் பரிசுகளில் இதுவும் ஒன்று.