Wednesday, November 30, 2011

கேள்விக்குள்ளாகும் மக்களாட்சி: பிரதிநிதிகள் சபையில் மக்களின் பங்கு


நமது நாடு உலகின் மிகப்பெரிய மக்களாட்சி என அழைக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் நாம் ஒரு மக்களாட்சியில் இருப்பதாக உணர்கிறோமா எனும் கேள்வி பல தடவை எழுந்தது உண்டு. லோக்பால் மசோதா பிரச்சினைகளின் போது அடிக்கடி நான் கேட்ட ஒரு சொற்றொடர் " மக்கள் பிரதிநிதிகளை தவிர வேறு யாரும் என்ன சட்டம் வேண்டும் என வலியுறுத்த முடியாது" என்பது. அதன் தொடர்ச்சியாக எனக்குள் எழுந்த எண்ணங்களின் பதிவு இது.


ஒரு மக்களாட்சி என்பது மக்களுக்காக, மக்களால், மக்களை கொண்டு நடத்தப்படும் ஒரு ஆட்சி என்பது அனைவரும் கூறும் விளக்கம். இப்போது இங்கு தான் சில பிரச்சனைகள் வருகின்றன. நமது மக்களாட்சி பொது மக்களை அங்கமாக கொள்ளாமல், பிரதிநித்துவ முறையில் அமைந்தது. அதாவது, ஒரு பகுதியில் இருக்கும் மக்களின் பிரதிநிதியாக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் அந்த மக்களின் சார்பாக எல்லா முடிவுகளையும் எடுக்கிறார்.


முதலாவது பிரச்சனை தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதி சார்ந்தது. அந்த பிரதிநிதியை அந்த குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் அணைத்து மக்களும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கவில்லை. மாறாக அதிகமான மக்கள் ஓட்டளித்த ஒருவர் தேர்ந்தேடுக்கபடுகிறார். இவர் எப்படி தனக்கு எதிராக ஓட்டளித்த மக்களின் பிரதிநிதியாக செயல்பட முடியும். இந்த தேர்வு சரி என்று வாதாடினால் எதிராக வாக்களித்த மக்களும் அவர்கள் எண்ணங்களும் கணக்கில் இல்லாமல் போய்விடும். 


இரண்டாவது, எந்த ஒரு பிரதிநிதியும் தனக்கு என்று தனி கொள்கைகள் கொள்வது இல்லை. ஒரு கட்சியின் கொள்கைகளே அவர்களின் கொள்கைகள். தனியராக நிற்கும் ஒருவர் தன் கொள்கைகள் இன்னவை என மக்களுக்கு உணர்த்துவது கடினம். அதே போல் தேர்தலின் போது இருக்கும் பிரச்சினைகளுக்கு மட்டுமே கொள்கைகள் உருவாக்க படுகின்றன. அதற்க்கு மட்டுமே மக்கள் தங்கள் பிரதிநிதியாக யாரை தேர்ந்தெடுக்கலாம் என முடிவு செய்ய முடிகிறது. இடையில் ஒரு பிரச்சினை வரும் போது மக்களின் உணர்வுகள் எப்படி இருந்தாலும் கட்சிகள் என்ன நிலை எடுக்கின்றனவோ அதுவே மக்களின் பிரதிநிதுவமாக பதியப்படுகிறது. 


மூன்றாவது, ஏதேனும் ஒரு சமயம் மக்கள் தங்களின் கருத்துக்களை வெளிபடுத்த வேண்டும் என்றால் அதற்க்கு நேரிடையான ஒரு வழியும் கிடையாது. ஊடகங்களும், கட்சிகளின் எண்ணங்களும், செல்வாக்கு மிகுந்த வியாபாரிகளின் கருத்துக்களுமே போது மக்களின் கருத்துக்களாக பதியப்படுகின்றன. 


இப்படி இருக்க நாம் எப்படி ஒரு மக்களாட்சி நடக்கும் நாட்டில் இருக்கிறோம் என்று கூற முடியும். நம்மை ஆட்சி செய்பவர்கள் தவறு செய்தாலும் அவர்களாகவே தங்களை தண்டித்து கொள்ள வேண்டும் என்று ஏமாந்து காத்திருக்கிறோம். அல்லது அவர்களின் எதிர்கருத்து கொண்டவர்கள் ஆட்சிக்கு வந்து அவர்களை வதைத்து அவர்கள் கொண்டுவந்த திட்டங்கள் நல்லவையா கெட்டவையா என ஆராயாமல் எதிர் அணியினரின் திட்டம் என்பதற்காகவே மாற்றி அமைப்பதை வாய் பொத்தி பார்த்திருக்கிறோம்.
இதற்கு எனக்கு தோன்றிய ஒரு முக்கியமான தீர்வு, முக்கியமான சட்டங்கள் நிறைவேற்றப்படும் போது மக்களை அந்த சட்ட வடிவமைப்பில் நேரடி பங்கு கொள்ளவைப்பது, மற்றும் அந்த சட்டங்கள் வேண்டுமா வேண்டாமா எனும் முடிவை மக்களிடம் இருந்து நேரடியாக பெறுவது ஆகும். இந்த முறை சுவிச்சர்லாந்து நாட்டில் நடைமுறையில் இருக்கிறது என்று எங்கோ கேள்விப்பட்டதாக ஞாபகம்.இதிலும் பல பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் மாற்றங்களை செயல்படுத்தி பரிசோதிக்கும் போது பல பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு கிடைக்கும்.








Monday, June 13, 2011

கல்வி = அறிவு; கல்வி != வேலை

கடந்த சில நாட்களாக சமச்சீர் கல்வி பற்றி நடந்து வரும் விவாதங்களை கவனித்து வந்த போது, நான் கல்வியை பற்றி வைத்திருக்கும் சில கருத்துக்களை பகிர்ந்துகொள்ள எண்ணியே இந்த பதிவு.

நான் பட்ட படிப்பை முடித்து ஒரு கல்லூரியில் வேலை செய்ய ஆரம்பித்ததில் இருந்ததே சில முரண்பாடுகளை கவனித்து வந்துள்ளேன், அது தான் இந்த பதிவின் தலைப்பு. இதற்கு நானும் விதிவிலக்கல்ல. படிக்கும் மாணவர்கள் அனைவருக்குமே கல்வி என்பது வேலை வாங்குவதற்கு ஒரு கருவி அல்லது ஒரு வழி. யாருமே கல்வியினை அறிவை வளர்த்துக் கொள்ள ஒரு வழியாக தேர்ந்தெடுப்பது இல்லை. மாணவர்களிடமும், பள்ளி கல்வி முடித்து கல்லூரியில் சேரும் நிலையில் உள்ள மாணவர்களின் பெற்றோரிடமும் சாதரணமாக நான் எதிர்கொள்ளும் கேள்விகள்.

1. எத்தனை மார்க் எடுத்தால் மென்பொருள் நிறுவனங்களில் வேலை கிடைக்கும்?

2. எந்த மென்பொருளை கற்றுக்கொண்டால் எளிதாக வேலை கிடைக்கும்?

3. எந்த கல்லூரியில் படித்தால் எளிதாக வேலையில் சேரலாம்?

4. எந்த பாடப்பிரிவிற்கு வேலைகள் அதிகமாக உள்ளன?

நான் மேற்கண்ட கேள்விகள் அபத்தமானவை என்றோ அல்லது தேவையற்றது என்றோ எண்ணவில்லை என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். கட்டாயம் மிகசிறந்த நிறுவனத்தில் வேலை செய்வதும் , கை நிறைய சம்பாதிப்பதும் நாம் நினைத்த மாதிரி வாழ தேவை தான். ஆனால் கல்வி கற்கும் பருவத்தில் கல்வியினை நம் அறிவை வளர்த்துக்கொள்ள என எண்ணாமல் வேலை வாங்குவதற்கு என எண்ணுவதே மேற்கண்ட கேள்விகள் எழ காரணம். முன் காலங்களில் கல்வி, அறிவை வளர்க்க என்றே பொருள்பட்டது. ஆனால் இப்போது அப்படி இல்லை.

இதனை சரிசெய்ய நாம் கல்வி கற்பிக்கப்படும் முறை , மற்றும் மாணவர்களின் அறிவை சோதிக்கும் முறை ஆகியவற்றையே மற்ற வேண்டும் என்பது எனது எண்ணம். இவற்றை மாற்றாமல் நாம் பாடத்திட்டத்தை மாற்றுவதில் எந்த பயனும் இல்லை. ஏனெனில் பாடத்திட்டம் மாறினாலும் கல்வி கற்கும் முறை மாறவில்லை.

கல்வி கற்பிக்கும் முறை பற்றி முதலில் எடுத்துக் கொள்வோம். இன்று பள்ளிகளிலும், கல்லூரியிலும் கல்வி கற்பிக்க படுவதில்லை, ஒப்பிக்கப்படுகிறது. ஆசிரியர் பாடப்புத்தகத்தில் இருந்து தான் மனப்பாடம் செய்தவற்றை அப்படியே வகுப்பில் ஒப்பிக்கிறார். மாணவன் வீட்டில் வந்து அதனை மனப்பாடம் செய்கிறான். இதன் மூலம் அவன் படித்திருப்பான் ஆனால் புரிந்திருக்க மாட்டான். இதற்கு விதிவிலக்காக இருக்கும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.

இரண்டாவதாக மாணவனின் அறிவினை சோதிக்கும் முறை. ஒரு மாணவன் சில கேள்விகளை படித்து விட்டு தேர்வுக்கு செல்கிறான். அன்று அந்த கேள்விகள் வினாத்தாளில் இருந்தால் அவன் அதிக மதிப்பெண்களை பெற்றுவிடுவான். அதற்கு நேர்மாறாக இருந்தால் குறைந்த மதிப்பெண்கள் பெறுவான் அல்லது தேர்வில் தோல்வி அடைவான். ஆக அவனது அதிர்ஷடம் அன்று எப்படி இருந்தது என்பதினை பொறுத்தே அவனது தகுதி சோதிக்கபடுகிறது. மென்பொருள் நிறுவனங்கள் ஒரு மாணவனின் கல்லூரி மதிப்பெண்களை வைத்து மட்டுமே யாரையும் வேலைக்கு எடுப்பது இல்லை , மாறாக தனியாக தேர்வுகள் நடத்தி அதன் மூலமே தேர்ந்தெடுக்கின்றனர். அதே போல் சில வருடங்களாகவே நாட்டின் பட்டதாரிகளில் இருபத்தி ஐந்து சதவிகிதத்தினர் மட்டுமே வேலைக்கு தகுதியனவர்களாக இருக்கிறார்கள் எனும் கூற்றினை செய்திதாள்களில் படித்திருக்கலாம். இவை இரண்டும் நம் தேர்வு முறைகளின் தோல்வியை மட்டுமே தெரிவிக்கின்றன.

இதை போலவே இன்னும் நிறைய காரணிகள் இருக்கின்றன. அவற்றை மாற்றாமல் பாடதிட்டத்தினை மற்றும் மாற்றுவதால் எந்த பயனும் இல்லை என்பதுவே எனது எண்ணம்.

Monday, January 31, 2011

போராட்டங்களும் அதன் பாதிப்புகளும்

நான் திருச்செந்தூர் அருகில் இருக்கும் ஒரு கல்லூரியில் வேலை செய்கிறேன். கல்லூரி என்றவுடனே நம் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது, பசுமையான நினைவுகள் தான். அதே போல் மாணவர்களுக்கு சிறிது சுதந்திரம் இருக்க கூடிய கல்லூரிகளில், படித்தவர்களுக்கு அவர்கள் செய்த போராட்டங்களும் நினைவுக்கு வரும். ஆனால் இந்த பதிவு அந்த போராட்டங்களை பற்றியது இல்லை. மாறாக, சமுகத்தில் நடக்கும் ஒரு போராட்டம் எந்த அளவிற்கு மாணவர்களின் அன்றாட நடவடிக்கைகளை பாதிக்கிறது என்பதை பற்றியதே இந்த பதிவு.

சமீபத்தில், எதோ ஒரு பிரச்சினையினால் திருசெந்தூரில் இரண்டு நாட்கள் மதிய நேரங்களில் சிறிது பதற்றம் நிலவியது. அந்த சமயங்களில் எங்கள் கல்லூரிக்குள் நிலவிய பதற்றம் மிகவும் அதிகம். ஒவ்வொருவரும் வேறுமாதிரியான பதற்றங்களில் இருந்தார்கள். அருகிலே இருந்து வரும் ஆசிரியர்கள், தங்கள் குழந்தைகளின் பள்ளிகள் அனைத்தும் விடப்பட்டன என அறிந்தவுடன் குழந்தைகளை பற்றி கவலைப்பட ஆரம்பித்து விட்டனர். அதே போல் எங்கள் கல்லூரி பேருந்துகளின் ஒருங்கிணைப்பாளர் பேருந்துகளின் பத்திரம் பற்றியும், பேருந்துகளை எந்த வழியில் அனுப்புவது, திருச்செந்தூரில் இருந்து வரும் மாணவர்களை எப்படி கொண்டு சேர்ப்பது என்பது பற்றியும் வருத்தப்பட ஆரம்பித்து விட்டார்.

இதே போல் இன்னும் பல விதமான வருத்தங்கள் இருந்தாலும், குறிப்பாக நான் அதிகமான வருத்தத்தினை, வருத்தம் என்பதை விட பயம் என்று குறிப்பிடலாம், நான் கண்டது கல்லூரி பேருந்துகளை பயன்படுத்தாமல் தனியார் மாற்றும் அரசு பேருந்துகளில் வரும் மாணவர்களின் கண்களில் தான். சிறு பிரச்சினை என்றாலே நமது அரசு பேருந்துகள் நின்று போகும், தனியார் பேருந்துகள் சில ஓடினாலும் ஏற முடியாத அளவு கூட்டம் இருக்கும். ஆனால் அன்று நாங்கள் கேள்விப்பட்டது, எந்த பேருந்துகளும் ஓடவில்லை என்பது தான். நினைத்து பாருங்கள். அந்த மாணவர்களில் பலர் இரண்டு மூன்று பேருந்துகள் மாறி செல்ல வேண்டியது உண்டு. இவர்களால் செல்ல முடியாது என்பதை போல் பெற்றோருக்கு தகவல் சொன்னால் அவர்களும் வந்து அழைத்து செல்ல முடியாது. தனி வாகனங்கள் வைத்திருக்கும் பெற்றோர் மட்டுமே வந்து அழைத்து செல்ல முடியும்.

இந்த பிரச்சினை இருந்ததால் சில மாணவர்கள் பேருந்து ஓடவில்லை என்றதுமே கவலையில் ஆழ்ந்து விட்டனர். அவர்கள் பாடத்தினை கவனிப்பது நின்று போனது. இரண்டாம் நாளிலும் இதே போல் செய்தி வர கல்லூரி இடையில் விடப்பட போவதாக தகவல் வந்தது. அந்த நொடியே ஒரு மாணவி தனது புத்தகத்தினை மூடி பையை கிளம்ப தயார் செய்து விட்டார். அப்படியானால் இது வரை நான் நடத்திய எதையுமே அந்த மாணவியால் கவனித்து இருக்க முடியாது.

இதே போல் அனைவருக்கும் ஒரு சம்பவம் நடந்து இருக்கலாம். நியாமான போரட்டங்கள் செய்ய வேண்டி இருந்தாலும் கூட இவ்வாறு முன்னறிவிப்பில்லாமல் நடக்கும் போராட்டங்கள் பலருக்கு பாதிப்பை உண்டு பண்ணுகின்றன. ஆனால் இதனை எவருமே உணர்ந்ததாக தெரியவில்லை. நமது சனநாயகத்தின் பரிசுகளில் இதுவும் ஒன்று.

Wednesday, January 19, 2011

காடு பார்க்க வாருங்கள்

உங்களுக்கு காடு பார்க்க வேண்டுமா, நான் கூறும் மூவரை உங்கள் உடன் சேர்த்து கொள்ளுங்கள். அந்த மூவர் குட்டப்பன்,கிரிதரன் நாயர், மற்றும் அய்யர். இவர்களுடன் நீங்கள் காடு பார்க்க கிளம்பினால், கட்டாயம் காட்டை விட்டு வெளி வரமாடீர்கள். எனக்கும் ஜெயமோகனின் காடு நாவலை படித்த பின்பு இந்த எண்ணம் தான் தோன்றியது. இவர்களுடன் காடு பார்க்க கிளம்ப வேண்டும். அனால் இவர்களை அந்த நாவலில் அன்றி இந்த உலகில் எப்படி கண்டுபிடிப்பது என்பது தான் தெரியவில்லை.

ஜெயமோகனின் காடு நாவல், நமக்கு இந்த கதாபாத்திரங்களின் வழியாகவே காட்டை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. அதிலும் கிரிதரனின் கண்களின் மூலமாக. தனது மாமனின் காண்ட்ராக்ட் வேலைகளுக்காக காட்டுக்குள் வரும் கிரியை, அந்த காடு எப்படி தன் வயமக்குகிறது என்பதை படித்து அறிதலே சுவாரசியம்.குட்டப்பன் முதலில் முக்கியமான ஒரு கதாபாத்திரமாகவே தெரிவதில்லை, ஆனால் காட்டினை பற்றிய அவனது அறிவும், காட்டின் ஒரு அங்கமாகவே அவன் வாழ்வதும், நாம் காடு சென்றால் அவனை துணைக்கு அழைத்து செல்லவேண்டும் எனும் என்னத்தை வழுப்படுத்துகிறது. முக்கியமாக சென்நாயினை பற்றிய விவரங்கள். சென்நாயினை மிருக காட்சி சாலைகளில் பார்த்திருக்கிறேன். மிகவும் குட்டியான ஒரு மிருகமாக தான் தெரியும். அனால் குட்டப்பன் கூறுவதை கேட்டால் தான் நமக்கு உண்மை புரியும். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது எனும் மொழி இங்கு உண்மை. அந்த நொடிக்கு பிறகு தான் நான் குட்டப்பனை முக்கியமான கூட்டாளியாக சேர்த்து கொண்டேன்.

அதே போல் காட்டின் அழகை நீங்கள் ரசிக்க வேண்டுமானால், அதுவும் இலக்கிய பாடல்களுடன் என்றால் கட்டாயம் அய்யர் வேண்டும்.ஆனால் மனிதர் பெண்களை பார்த்தால் உன்மத்தம் ஏறியவர் போல் வர்ணிக்க ஆரம்பித்து விடுவார் கவனம். இப்படி பட்ட மனிதர்கள் சும்மா இருக்கும் சமயங்களில் இலக்கியம் பேசினால் போரடிக்க தான் செய்யும், அனால் காட்டினுள் இலக்கிய விவரணையுடன் ஒரு சுற்று பயணம் என்றால் கட்டாயம் சுவாரசியம் தான்.

ஜெயமோகனின் நாவல்களுள் நான் இரண்டை மற்றுமே இது வரை படித்துள்ளேன். விஷ்ணுபுரம் ஒன்று, காடு அடுத்தது. இரண்டிலுமே என்னை கவர்ந்தது காடு தான். அதற்கு காரணம் நான் மேலே சொன்ன கதாபாத்திரங்கள் தான். இன்னும் எத்தனையோ கதாபாத்திரங்கள் இருந்தாலும் கூட அவை எதுவும் என்னை வசீகரிக்கவில்லை. ஜெயமோகனின் எழுத்து வன்மையும் இதில் தான் உணர முடிந்தது. ஒரு சீராக செல்லும் கதை எப்போது முன்பின்னாக மாறியது என உணர முடியவில்லை அதேபோல் அதிகமான தத்துவ விசாரங்களும் இல்லை. தத்துவங்கள் அய்யர் மூலமாகவும், குட்டப்பன் மூலமாகவும், கதையோடு, நிகழ்வாக வெளிப்படுகிறது. இதுவே இந்த நாவலை எளிமைபடுத்துகிறது. காடு பார்க்க வாய்ப்பு கிடைத்தால், இந்த நாவலை வாசித்து செல்லுங்கள் காட்டின் அனுபவம் கட்டாயம் வித்தியாசமாக் இருக்கும்.

Tuesday, January 11, 2011

ஆழி சூழ் உலகு: ஜோ டி குருஸ்

நெய்தல் நிலத்திற்கு என்று ஒரு வித்தியாசம் உண்டு. மற்ற நான்கு நிலத்திலும் நிலம் என்பது முக்கியம். நிலத்தின் வேறுபாடுகள் மட்டுமே அவற்றை பிரிக்கின்றன.ஆனால் நெய்தல் நிலத்தின் தன்மை வேறுமாதிரியானது. அங்கு நிலம் அல்ல முதன்மை பெறுவது, கடல். இப்படிப்பட்ட நெய்தல் நிலத்தின் மக்களாகிய பரதவர்களின் வாழ்கை பற்றிய ஒரு படைப்பு தான், ஆழி சூழ் உலகு.

மீனவர்களின் வாழ்கை மீனவர்களின் சொல்வழக்குகளின் மூலமே வெளிப்படுத்த படுவது இந்த நூலின் மிக முக்கிய பலம். சில பக்கங்கள் படித்து முடிக்கும் வரை நமக்கு பழக்கப்படாமல் இருக்கும் மொழியும் பொருள்களும், நாம் எந்த அளவுக்கு பரதவர்களிடம் இருந்து விலகி இருக்கிறோம் என தெளிவு படுத்துகிறது. நூலினுள் மூழ்க மூழ்க நாமும் அதன் ஒரு பகுதி ஆகி விடுவது ஆச்சர்யம்.

தொம்மந்திரையார்,கோத்ரா,ஜஸ்டின்,வசந்தா,சூசை,சிலுவை இன்னும் சில கதாபாத்திரங்களும், அவர்களின் வாழ்க்கையுமே கதை. அவர்களுக்குள் இருக்கும் உறவும்,பகையும் ஆச்சர்ய படுத்துகின்றன. அந்த மக்கள் எப்படி அருகில் இருக்கும் மற்ற மக்களால் புறக்கணிக்க படுகிறார்கள், அந்த ஊருக்கே வரும் அரசு ஊழியர்களும் இறை பிரதிநிதியும் அவர்களை எந்த அளவிற்கு பயன்படுத்தி கொள்கிறார்கள் என்பதும் முகத்தில் அறையும் உண்மைகள்.

இந்த கதை நடக்கும் வருடங்களில் நடந்த முக்கியமான சம்பவங்கள் கதாபாதிரன்கிளின் உரையாடலின் மூலமாக, அவர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக, வெளிப்படுவது மிகவும் அருமை. ஆகவே இது ஒரு வகையில் வரலாற்று நூல் எனவும் கொள்ளலாம். சாமான்ய மக்களின் வாழ்க்கையினை சொல்லும் ஒரு வரலாற்று நூல். நான் இந்த புத்தகத்தினை மிகவும் ரசிக்க காரணம் எனது ஊரும் இந்த நூலின் ஒரு பகுதியாக வருவதே. முக்கியமான கதாபாத்திரங்கள் அனைத்தும் தூத்துக்குடி வருவதும், அவர்களின் வாழ்வில் தூத்துக்குடி ஒரு அங்கமாக இருப்பதும், குறிப்படப்படும் சில கட்டடங்கள் இன்னும் இருக்கின்றனவா என என்னை யோசிக்க வைத்தன. இன்னாசியர் புறத்தில் இருக்கும் ஒரு இளம் துறவிகள் மடத்தினை என்னால் அடையாளம் காண முடிந்ததது, ஏனெனில் நான் அதற்கு அருகில் இருக்கும் ஒரு பள்ளியில் தான் படித்தேன். ஆனால், பாண்டிபதி அரண்மனை என குறிப்பிடப்படும் கட்டடம் எங்கு இருந்த்தது என உணர முடியவில்லை.

ஒரு புதிய உலகினை திறந்து காட்டுவதன் மூலம் இந்த நூல் என்னை வசிகரிக்கவே செய்கிறது. இந்த நூலின் ஆசிரியர் எழுதிய "கொற்கை" எனும் நூலை வாங்க முடிவு செய்து விசாரித்த வண்ணம் உள்ளேன்.

Tuesday, January 4, 2011

உப பாண்டவம்

எஸ்.ராமகிருஷ்ணனின் முக்கியமான நூல்களில் ஒன்று உப பாண்டவம். இந்த நூலுக்காக இரண்டு ஆண்டுகள் தேடி அலைந்து தான் வாங்க முடிந்தது. ஏனெனில் பழைய பதிப்பு விற்று விட்டதால், நூல் எங்கும் கிடைக்கவில்லை. இந்த நூலுக்கான அறிமுகம் எனக்கு எஸ்.ராமகிருஷ்ணனின் துணையெழுத்து எனும் கட்டுரை தொகுதியில் இருந்து கிடைத்தது. ஆனந்த விகடனில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. இப்போது ஆனந்த விகடன் பதிப்பகத்தின் மூலம் நூலாகவும் கிடைக்கிறது. கேள்விப்பட்டது முதல் புத்தக கடைகளுக்கு செல்லும் போது எல்லாம் இந்த நூலை பற்றி விசாரிப்பேன். இறுதியில் ஒருநாள் கிடைக்கவும் செய்தது,எனது மனதை கொள்ளையடிக்கவும் செய்தது.

மகாபாரதத்தை எல்லோரும் பாண்டவர்களுக்கும் - கௌரவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட சரித்திரமாக தான் தெரிந்து வைத்திருப்போம். ஆனால் இந்த முக்கியமான கதாபாத்திரங்களுக்கு, அருகிலேயே இருக்கும் துணை கதாபாத்திரங்கள் பற்றி கவனம் கொள்ளும் நூல் தான் உப பாண்டவம். நமக்கு தெரிந்த அதே கதை தான், அதே கதாபாத்திரங்கள் தான், அதே சம்பவங்கள் தான், ஆனால் கதையின் மையம் மட்டும் வேறு.

கௌரவர்கள் 100 பேர் என்று தான் படித்திருப்போம். ஆனால் அவர்களுடன் பிறந்த துச்சலை எனும் பெண் ஒருத்தி இருந்தால் என்றோ, அவளது கணவன் தான் அபிமன்யுவை கொன்றதற்காக, அர்சுனனால் கொல்லப்பட்ட செயத்ரதன் என்றும் நம்மில் அதிகம் பேருக்கு தெரிந்திருக்காது. அதே போல் கௌரவர்களுக்கு 101 வது சகோதரனாக அவர்களது தந்தைக்கும், ஒரு சேடி பெண்ணிற்கும் பிறந்த யுயுத்சு உண்டு என்பதும் எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் என தெரியவில்லை. அதே போல் பிதாமகர் அம்பு படுக்கையில் வீழ்வதற்கு காரணமான சிகண்டிக்கு ஒரு மனைவி இருந்தது பற்றி எத்தனை பேருக்கு தெரியும். அதே மாதிரி பாண்டவர்களுக்கு புது மாளிகை கட்டி கொடுத்து மகாபாரத போர் ஏற்பட வழி ஏற்படுத்தி கொடுத்த மயனின் பூர்விகம், பாண்டவர்கள் மற்றும் குந்திக்கு பதிலாக அரக்கு மாளிகையில் எரிக்கப்பட்ட வேட்டுவ பெண்,அவள் கணவன், இன்னும் எத்தனையோ கதாபாத்திரங்களை இந்த புத்தகம் எனக்கு அறிமுகபடுத்தி இருந்தது.

வர்ணிக்க இவ்வளவு எளிதாக இருந்தாலும் கூட சற்றே யோசிப்போமானால் இவ்வளவு தகவல்களை திரட்ட எவ்வளவு கஷ்டங்களை எதிர் கொள்ள வேண்டி வரும்.இந்த புத்தகத்தை படித்து முடிக்கும் வரை எனக்கென்று ஆதர்ச எழுத்தாளர் என்று யாரும் இருக்கவில்லை. இந்த புத்தகத்தை முடித்த பிறகு அந்த நிலை மாறித்தான் போனது.

Monday, January 3, 2011

கவிதைகள்

மாநகராட்சிக்கு,
புதிய துப்புரவு
பணியாளர்களோ ?
குப்பை தின்னும் கழுதைகள் !

***************************

சாக்கடைக் குளங்களை
வற்றச் செய்ய
முனிசிபாலிடியில்
புதிய திட்டம் ?
ரோடுகளில் பன்றி வளர்ப்பு!

**************************

இந்த வயதிலேயே
மூடை தூக்கி
உழைக்க ஆரம்பித்து விட்டதோ ?
புத்தகப் பையுடன் குழந்தை!

நேருவின் "Glimpses of world History"

எனது நேற்றைய பதிவில் எனக்கு பிடித்த புத்தகங்களில் ஒன்றாக சவகர்லால் நேருவின் "Glimpses of world History" எனும் புத்தகத்தையும் சொல்லி இருந்தேன். உண்மையில் சொல்ல வேண்டுமானால் என்னை முதன் முதலில் ஆச்சர்ய படுத்திய புத்தகம் என்றால் அது இந்த புத்தகம் தான். அதை படித்து முடித்த உடன் எனக்குள் தோன்றிய எண்ணம் நமக்கு ஏன் நம் பெற்றோர் இப்படி தங்களுக்கு தெரிந்த விஷயங்களை கடிதம் எழுதவில்லை என்பது தான்.

நேரு தனது பெண் இந்திரா காந்திக்கு, சிறையில் இருந்து எழுதிய கடிதங்களின் தொகுப்பு தான் அந்த புத்தகம். கடிதங்கள் என்றால் நாம் இன்று அனுப்பும் கடிதங்களோ மினஞ்சல்களோ இல்லை. உலகத்தின் வரலாற்றை கடிதங்களாக எழுதியிருக்கிறார். உலகத்தின் வரலாறு என்றால், மனிதன் எப்படி நாகரிகத்தை தோற்றுவித்தான் என்பதில் தொடங்கி அவரின் கால கட்டம் வரை எழுதியிருக்கிறார்.

சொல்லும் விதமும் அருமை. எங்கிருந்து தொடங்குவது, எந்த நாட்டினை முதலில் சொல்வது, எந்த சம்பவத்தை முதலில் சொல்வது என்ற குழப்பம் இல்லாமல், ஒரு நூறு வருடங்களை எடுத்து கொண்டு, அந்த நூறு வருடங்களில் ஒவ்வொரு நாட்டிலும் நடந்தது, அதனால் பக்கத்து நாடுகளில், கண்டங்களில், ஏற்பட்ட பாதிப்புகள், அதனால் உருவான வரலாறு என தெளிவாக செல்லும் ஒரு கதை போல் இருக்கும். அந்த புத்தகத்தினை படித்தது முதல் இன்று வரை வரலாற்று சம்பவங்கள் பற்றி கேள்விப்பட்டால் என் மனது உடனே நினைப்பது இது எதனால் ஏற்பட்டிருக்கும் இதன் பாதிப்புகள் பக்கத்து நாடுகளில் எப்படி இருந்திருக்கும் என்று தான். நேரு தன புத்தகத்தில் இந்த கதை சொல்லும் போக்கிற்கும் ஒரு காரணம் சொல்கிறார். எந்த நாட்டின் வரலாறும் பக்கத்து நாடுகளை சாராமல் இருக்காது என்கிறார். இன்றும் அது எவ்வளவு உண்மை. நமது அண்டை நாடுகளுடன் நமது உறவுகள் பாதிப்படையும் போது நமது பொருளாதாரம் எவ்வளவு பாதிப்படைகிறது. அதனால் நமது சமுகத்தில் ஏற்படும் மாற்றம் எல்லாவற்றையும் எடுத்து கொள்ளும் போது அவர் சொன்னது எவ்வளவு உண்மை.

அந்த புத்தகத்தினை படித்த பின்பு நான் எடுத்து கொண்ட உறுதிமொழி எனது குழந்தைகளுக்கும் நான் கடிதம் எழுத வேண்டும் என்பது தான். அனால் எனது குழந்தைகளுக்கு கடிதங்களை படிக்கும் அளவுக்கு பொறுமை இருக்குமா என்பது தான் தெரியவில்லை. பொறுத்திருந்து பார்க்க வேண்டியது தான்.

Sunday, January 2, 2011

என் வாழ்வில் புத்தகங்கள்

புத்தக திருவிழா நேரமாதலால் புத்தங்கள் பற்றி எழுதலாம் என நினைத்து இந்த பதிவு. எனக்கு நினைவு தெரிந்த வரை நான் விரும்பி படித்த முதல் புத்தகம் தினமலருடன் வரும் சிறுவர்மலர் தான். அதன் பிறகு மெல்ல எனது அக்கா ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் படித்ததால் அவள் மூலம் ஆங்கில நாவல்கள் படிக்க கிடைத்தன. அப்பப்போ வீட்டில் போராடி, கெஞ்சி கூத்தாடி வாங்கிய ராணி காமிக்ஸ் போன்ற புத்தகங்களும் நான் முதன் முதல் படித்த புத்தகங்களுள் அடங்கும். ஆனால் என்றுமே புத்தகங்களின் பால் ஒரு ஈடுபாடு இருந்தே வந்துள்ளது.

எனது உண்மையான வாசிப்பு அனுபவங்கள் தொடங்கியது கல்லூரியில் தான். நான் பள்ளிக்காலங்களில் படித்த மேற்சொன்ன புத்தகங்களின் மூலமாகவே கல்கி பற்றி தெரிந்து வைத்திருந்தேன். கல்லூரியில் உடன் படித்த மாணவி ஒருத்தியின் மூலம் சிவகாமியின் சபதம் அறிமுகம் ஆனது. அதன் பிறகு வீட்டில் செலவுக்கு தந்த பைசாவில் மிச்சம் செய்து புத்தகங்கள் வாங்கி, நண்பர்களிடத்தில் வாங்கி என்று சில கல்கியின் நாவல்களும், சாண்டில்யன் நாவல்களும் படித்து முடித்தேன். சென்னையில் வந்து படித்ததால் செலவுக்கு மாசமாசம் பணம் கிடைத்தது வசதியாக இருந்தது. அப்படி பட்ட ஒரு சமயத்தில் தான் சென்னையில் புத்தக கண்காட்சி நடப்பதாக தெரிய வந்தது. 2002 ம் வருடம் என நினைக்கிறேன், அப்போது புத்தக கண்காட்சி காய்தேமில்லத் கல்லூரியில் நடந்தது. அங்கு தான் எனக்கு பெரியார் அறிமுகம் ஆனார். அவரை பற்றி கேள்விப்படிருந்தேனே ஒழிய அவரை படிக்க தேடியது கூட இல்லை. ஆனால் அந்த புத்தக கண்காட்சியில் யாருமே இல்லாமல் வெறிச்சோடிய நிலையில் இருந்த கடையை பார்த்தவுடன் அப்படி என்ன தான் இருக்கிறது அவரின் எழுத்தில் என எனக்குள் ஒரு குறுகுறுப்பு. அந்த நாள் கட்டாயம் என் வாழ்கையை சரியான பாதையில் செலுத்த நான் முனைந்த முதல் நாள். அதன் பிறகு எந்த ஒரு புத்தக திருவிழாவிலும்( மூன்றுக்கு தான் சென்றுள்ளேன்) சுயமரியாதை பதிப்பக கடையை பார்க்காமல் வந்தது இல்லை.

அந்த சமயத்தில் எனக்கு பெரிதாக இலக்கிய ஆர்வம் இருந்தது இல்லை. ஆனால் பிறகு வேறு ஒரு நண்பரின் மூலம் அனந்த விகடனும், அதன் மூலம் பல இலக்கிய நூல்களும் எழுத்தாளர்களும் அறிமுகமாயினர். அதன் பிறகு நான் சென்ற புத்தக கண்காட்சிகளில் நூல்களை தேடி தெரிவு செய்து வாங்கியிருக்கிறேன். அதே போல் வேலைக்கு செல்ல ஆரம்பித்த பின்னும் அதற்கு சற்று முன்னும், சென்னையில் லேண்ட்மார்க் மாற்றும் கிக்கின் போதம்ஸ் புத்தக கடைகளில் சென்று புத்தகங்கள் வாங்குவது வழக்கமாக ஆனது.

நான் இதுவரை படித்த புத்தகங்களுள் எனக்கு மிகவும் பிடித்த, என்னை பாதித்த புத்தகங்களில் சில
  1. பொன்னியன் செல்வன் - கல்கி
  2. glimpses of world history - நேரு
  3. கடல் புறா- சாண்டில்யன்
  4. துணையெழுத்து - எஸ். ராமகிருஷ்ணன்
  5. உப பாண்டவம் - எஸ். ராமகிருஷ்ணன்
  6. தண்ணீர் தேசம் - வைரமுத்து
  7. என் பெயர் ராமசேசன்- ஆதவன்
மேலே குறிப்பிடப்படிருப்பது கட்டாயமாக தர வரிசை இல்லை.

இந்த புத்தக கண்காட்சிக்கும் வர வேண்டும் என்பது எனது ஆசை. ஆனால் இப்போது சொந்த ஊரில் இருப்பதால் வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு வர முடியுமா என தெரியவில்லை.

Saturday, January 1, 2011

புது வருட உறுதிமொழிகள்

புது வருடம் பிறக்கும் போதே ஒவ்வொருவரும் பல விதமான உறுதிமொழிகள் எடுப்போம். சில போன தடவை எடுத்து நிறைவேறாமல் போனதாக இருக்கலாம். சில எடுத்த உறுதிமொழி மறந்து போய் இந்த வருடம் நினைவுக்கு வந்ததாய் இருக்கலாம். பல வருடங்கள் நான் உறுதிமொழிக்காக அதிகம் மெனக்கெட்டது இல்லை. அனால் இந்த வருடம் ஏனோ நிறைய விசயங்கள் மனதில் வந்து அமர்ந்து கொண்டு பாடாய் படுத்தின.

அப்படி ஒரு விஷயம் தான் இந்த பதிவும் கூட.2008ம் வருடமே எனது முதல் பதிவை எழுதி இருந்தாலும் கூட, அடுத்த பதிவு பற்றி அதிகமாக யோசிக்கவில்லை. படிக்க படிக்க எழுதும் ஆர்வம் வரும் என்பது தினமும் படிக்கும் வழக்கம் உள்ள எல்லோருக்கும் தெரிந்து தான் இருக்கும். அதுபோலவே சமீப காலங்களில் தொடர்ந்து பதிவுகளை வசித்து வருவதால் எனக்கும் கூட பதிவு எழுதும் பழக்கத்தை இந்த வருடத்தில் இருந்து தொடங்க வேண்டும் என தோன்றியது. ஆரம்பித்தும் விட்டேன். முதல் பதிவாக இந்த புத்தாண்டு உறுதிமொழிகளையே எழுதவும் முடிவு செய்தேன்.

இது மட்டும் அல்ல எனது புத்தாண்டு உறுதிமொழி. முதல் தடவையாக உறுதிமொழி எடுப்பதால், ஒன்றோடு விடாமல் பல உறுதிமொழிகளை எடுத்தேன். பல வருடங்களாக விட்டு போய் இருந்த டைரி எழுதும் பழக்கத்தை தொடர வேண்டும் என்பது அடுத்த உறுதிமொழி. நான் +1 படுக்கும் போது தொடங்கிய பழக்கம் இது. பல வருடங்களாக தொடர்ந்து எழுதி வந்தேன். சில நண்பர்களுக்கும் கூட இந்த பழக்கத்தை பரிந்துரை செய்தேன். அவர்கள் இடையில் நிறுத்திய போதும் கூட நான் தொடர்ந்து எழுதி வந்தேன். இடையில் எங்கிருந்தோ சோம்பேறி எனும் நோய் என்னை தொற்றிக்கொள்ள அனைத்தும் விடப்பட்டது. ஆனால் அந்த நிலைமையிலும் நான் செய்த ஒரே ஒரு நல்ல காரியம் தொடர்ந்து டைரி வாங்கியது மட்டும் தான். இதனால் முற்றிலுமாக நிற்பதற்கு பதிலாக வருடத்திற்கு 10 நாட்கள் என்ற நிலையிலாவது எனது டைரி எழுதும் பழக்கம் தொடர்ந்தது. ஒரு வாரம் முன்பு திடிரென டைரி எடுத்து படிக்க பழைய நினைவுகள் உற்சாகம் தந்தன. நான் எழுதாமல் இழந்த நாட்கள் யோசிக்க வைத்தன. ஒருவழியாக அதுவும் எனது புத்தாண்டு உறுதிமொழியில் சேர்ந்து கொண்டது.

எனது முதல் எழுத்து பழக்கமே நான் அதே +1 படிக்கும் போது எழுதிய ஒரு கதை மூலம் தான். அப்போது குமாரராஜா எனும் பாதிரியார் எனக்கு ஆங்கிலம் எடுத்தார். அவர் எப்போதுமே பாடத்தை தவிர படம் சம்மந்தப்பட்ட பல விசயங்களை சொல்லி தருவது வழக்கம். அப்படி ஒருநாள் அவர் நடத்திய கதை எழுதுவது எப்படி என்பதன் பதிப்பு தான் எனது முதல் கதை. அதன் பிறகு இரண்டு மூன்று கதைகள் எழுதினாலும் கூட, என் பயத்தினாலும், ஒரு ஜோசியனாலும் என் எழுத்து பழக்கம் நின்று போனது. அதையும் தொடர்வது என்பது ஒரு முடிவு. இந்த பதிவுகளும் எழுத்து தான் என்றாலும், இதோடு நிறுத்திக்கொள்வதா அல்லது கதைகளிலும் முயற்சி செய்வதா என இன்னும் முடிவு எடுக்கவில்லை. முதலில் எழுதுவோம் அப்புறம் மற்றவை என முடுவு செய்தேன்.

நான் ஆசிரியர் வேலை பார்ப்பதால், வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களை பற்றி தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். அந்த பழக்கத்தையும் கடந்த சில வருடங்களாக விட்டு விட்டேன் அதையும் தொடர வேண்டும் என்பது முடிவு. பார்க்கலாம் இந்த வருடம் உறுதிமொழிகளை எப்படி கடைபிடிக்கிறேன் என்று..