Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Wednesday, November 30, 2011

கேள்விக்குள்ளாகும் மக்களாட்சி: பிரதிநிதிகள் சபையில் மக்களின் பங்கு


நமது நாடு உலகின் மிகப்பெரிய மக்களாட்சி என அழைக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் நாம் ஒரு மக்களாட்சியில் இருப்பதாக உணர்கிறோமா எனும் கேள்வி பல தடவை எழுந்தது உண்டு. லோக்பால் மசோதா பிரச்சினைகளின் போது அடிக்கடி நான் கேட்ட ஒரு சொற்றொடர் " மக்கள் பிரதிநிதிகளை தவிர வேறு யாரும் என்ன சட்டம் வேண்டும் என வலியுறுத்த முடியாது" என்பது. அதன் தொடர்ச்சியாக எனக்குள் எழுந்த எண்ணங்களின் பதிவு இது.


ஒரு மக்களாட்சி என்பது மக்களுக்காக, மக்களால், மக்களை கொண்டு நடத்தப்படும் ஒரு ஆட்சி என்பது அனைவரும் கூறும் விளக்கம். இப்போது இங்கு தான் சில பிரச்சனைகள் வருகின்றன. நமது மக்களாட்சி பொது மக்களை அங்கமாக கொள்ளாமல், பிரதிநித்துவ முறையில் அமைந்தது. அதாவது, ஒரு பகுதியில் இருக்கும் மக்களின் பிரதிநிதியாக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் அந்த மக்களின் சார்பாக எல்லா முடிவுகளையும் எடுக்கிறார்.


முதலாவது பிரச்சனை தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதி சார்ந்தது. அந்த பிரதிநிதியை அந்த குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் அணைத்து மக்களும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கவில்லை. மாறாக அதிகமான மக்கள் ஓட்டளித்த ஒருவர் தேர்ந்தேடுக்கபடுகிறார். இவர் எப்படி தனக்கு எதிராக ஓட்டளித்த மக்களின் பிரதிநிதியாக செயல்பட முடியும். இந்த தேர்வு சரி என்று வாதாடினால் எதிராக வாக்களித்த மக்களும் அவர்கள் எண்ணங்களும் கணக்கில் இல்லாமல் போய்விடும். 


இரண்டாவது, எந்த ஒரு பிரதிநிதியும் தனக்கு என்று தனி கொள்கைகள் கொள்வது இல்லை. ஒரு கட்சியின் கொள்கைகளே அவர்களின் கொள்கைகள். தனியராக நிற்கும் ஒருவர் தன் கொள்கைகள் இன்னவை என மக்களுக்கு உணர்த்துவது கடினம். அதே போல் தேர்தலின் போது இருக்கும் பிரச்சினைகளுக்கு மட்டுமே கொள்கைகள் உருவாக்க படுகின்றன. அதற்க்கு மட்டுமே மக்கள் தங்கள் பிரதிநிதியாக யாரை தேர்ந்தெடுக்கலாம் என முடிவு செய்ய முடிகிறது. இடையில் ஒரு பிரச்சினை வரும் போது மக்களின் உணர்வுகள் எப்படி இருந்தாலும் கட்சிகள் என்ன நிலை எடுக்கின்றனவோ அதுவே மக்களின் பிரதிநிதுவமாக பதியப்படுகிறது. 


மூன்றாவது, ஏதேனும் ஒரு சமயம் மக்கள் தங்களின் கருத்துக்களை வெளிபடுத்த வேண்டும் என்றால் அதற்க்கு நேரிடையான ஒரு வழியும் கிடையாது. ஊடகங்களும், கட்சிகளின் எண்ணங்களும், செல்வாக்கு மிகுந்த வியாபாரிகளின் கருத்துக்களுமே போது மக்களின் கருத்துக்களாக பதியப்படுகின்றன. 


இப்படி இருக்க நாம் எப்படி ஒரு மக்களாட்சி நடக்கும் நாட்டில் இருக்கிறோம் என்று கூற முடியும். நம்மை ஆட்சி செய்பவர்கள் தவறு செய்தாலும் அவர்களாகவே தங்களை தண்டித்து கொள்ள வேண்டும் என்று ஏமாந்து காத்திருக்கிறோம். அல்லது அவர்களின் எதிர்கருத்து கொண்டவர்கள் ஆட்சிக்கு வந்து அவர்களை வதைத்து அவர்கள் கொண்டுவந்த திட்டங்கள் நல்லவையா கெட்டவையா என ஆராயாமல் எதிர் அணியினரின் திட்டம் என்பதற்காகவே மாற்றி அமைப்பதை வாய் பொத்தி பார்த்திருக்கிறோம்.
இதற்கு எனக்கு தோன்றிய ஒரு முக்கியமான தீர்வு, முக்கியமான சட்டங்கள் நிறைவேற்றப்படும் போது மக்களை அந்த சட்ட வடிவமைப்பில் நேரடி பங்கு கொள்ளவைப்பது, மற்றும் அந்த சட்டங்கள் வேண்டுமா வேண்டாமா எனும் முடிவை மக்களிடம் இருந்து நேரடியாக பெறுவது ஆகும். இந்த முறை சுவிச்சர்லாந்து நாட்டில் நடைமுறையில் இருக்கிறது என்று எங்கோ கேள்விப்பட்டதாக ஞாபகம்.இதிலும் பல பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் மாற்றங்களை செயல்படுத்தி பரிசோதிக்கும் போது பல பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு கிடைக்கும்.








Monday, June 13, 2011

கல்வி = அறிவு; கல்வி != வேலை

கடந்த சில நாட்களாக சமச்சீர் கல்வி பற்றி நடந்து வரும் விவாதங்களை கவனித்து வந்த போது, நான் கல்வியை பற்றி வைத்திருக்கும் சில கருத்துக்களை பகிர்ந்துகொள்ள எண்ணியே இந்த பதிவு.

நான் பட்ட படிப்பை முடித்து ஒரு கல்லூரியில் வேலை செய்ய ஆரம்பித்ததில் இருந்ததே சில முரண்பாடுகளை கவனித்து வந்துள்ளேன், அது தான் இந்த பதிவின் தலைப்பு. இதற்கு நானும் விதிவிலக்கல்ல. படிக்கும் மாணவர்கள் அனைவருக்குமே கல்வி என்பது வேலை வாங்குவதற்கு ஒரு கருவி அல்லது ஒரு வழி. யாருமே கல்வியினை அறிவை வளர்த்துக் கொள்ள ஒரு வழியாக தேர்ந்தெடுப்பது இல்லை. மாணவர்களிடமும், பள்ளி கல்வி முடித்து கல்லூரியில் சேரும் நிலையில் உள்ள மாணவர்களின் பெற்றோரிடமும் சாதரணமாக நான் எதிர்கொள்ளும் கேள்விகள்.

1. எத்தனை மார்க் எடுத்தால் மென்பொருள் நிறுவனங்களில் வேலை கிடைக்கும்?

2. எந்த மென்பொருளை கற்றுக்கொண்டால் எளிதாக வேலை கிடைக்கும்?

3. எந்த கல்லூரியில் படித்தால் எளிதாக வேலையில் சேரலாம்?

4. எந்த பாடப்பிரிவிற்கு வேலைகள் அதிகமாக உள்ளன?

நான் மேற்கண்ட கேள்விகள் அபத்தமானவை என்றோ அல்லது தேவையற்றது என்றோ எண்ணவில்லை என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். கட்டாயம் மிகசிறந்த நிறுவனத்தில் வேலை செய்வதும் , கை நிறைய சம்பாதிப்பதும் நாம் நினைத்த மாதிரி வாழ தேவை தான். ஆனால் கல்வி கற்கும் பருவத்தில் கல்வியினை நம் அறிவை வளர்த்துக்கொள்ள என எண்ணாமல் வேலை வாங்குவதற்கு என எண்ணுவதே மேற்கண்ட கேள்விகள் எழ காரணம். முன் காலங்களில் கல்வி, அறிவை வளர்க்க என்றே பொருள்பட்டது. ஆனால் இப்போது அப்படி இல்லை.

இதனை சரிசெய்ய நாம் கல்வி கற்பிக்கப்படும் முறை , மற்றும் மாணவர்களின் அறிவை சோதிக்கும் முறை ஆகியவற்றையே மற்ற வேண்டும் என்பது எனது எண்ணம். இவற்றை மாற்றாமல் நாம் பாடத்திட்டத்தை மாற்றுவதில் எந்த பயனும் இல்லை. ஏனெனில் பாடத்திட்டம் மாறினாலும் கல்வி கற்கும் முறை மாறவில்லை.

கல்வி கற்பிக்கும் முறை பற்றி முதலில் எடுத்துக் கொள்வோம். இன்று பள்ளிகளிலும், கல்லூரியிலும் கல்வி கற்பிக்க படுவதில்லை, ஒப்பிக்கப்படுகிறது. ஆசிரியர் பாடப்புத்தகத்தில் இருந்து தான் மனப்பாடம் செய்தவற்றை அப்படியே வகுப்பில் ஒப்பிக்கிறார். மாணவன் வீட்டில் வந்து அதனை மனப்பாடம் செய்கிறான். இதன் மூலம் அவன் படித்திருப்பான் ஆனால் புரிந்திருக்க மாட்டான். இதற்கு விதிவிலக்காக இருக்கும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.

இரண்டாவதாக மாணவனின் அறிவினை சோதிக்கும் முறை. ஒரு மாணவன் சில கேள்விகளை படித்து விட்டு தேர்வுக்கு செல்கிறான். அன்று அந்த கேள்விகள் வினாத்தாளில் இருந்தால் அவன் அதிக மதிப்பெண்களை பெற்றுவிடுவான். அதற்கு நேர்மாறாக இருந்தால் குறைந்த மதிப்பெண்கள் பெறுவான் அல்லது தேர்வில் தோல்வி அடைவான். ஆக அவனது அதிர்ஷடம் அன்று எப்படி இருந்தது என்பதினை பொறுத்தே அவனது தகுதி சோதிக்கபடுகிறது. மென்பொருள் நிறுவனங்கள் ஒரு மாணவனின் கல்லூரி மதிப்பெண்களை வைத்து மட்டுமே யாரையும் வேலைக்கு எடுப்பது இல்லை , மாறாக தனியாக தேர்வுகள் நடத்தி அதன் மூலமே தேர்ந்தெடுக்கின்றனர். அதே போல் சில வருடங்களாகவே நாட்டின் பட்டதாரிகளில் இருபத்தி ஐந்து சதவிகிதத்தினர் மட்டுமே வேலைக்கு தகுதியனவர்களாக இருக்கிறார்கள் எனும் கூற்றினை செய்திதாள்களில் படித்திருக்கலாம். இவை இரண்டும் நம் தேர்வு முறைகளின் தோல்வியை மட்டுமே தெரிவிக்கின்றன.

இதை போலவே இன்னும் நிறைய காரணிகள் இருக்கின்றன. அவற்றை மாற்றாமல் பாடதிட்டத்தினை மற்றும் மாற்றுவதால் எந்த பயனும் இல்லை என்பதுவே எனது எண்ணம்.

Sunday, January 2, 2011

என் வாழ்வில் புத்தகங்கள்

புத்தக திருவிழா நேரமாதலால் புத்தங்கள் பற்றி எழுதலாம் என நினைத்து இந்த பதிவு. எனக்கு நினைவு தெரிந்த வரை நான் விரும்பி படித்த முதல் புத்தகம் தினமலருடன் வரும் சிறுவர்மலர் தான். அதன் பிறகு மெல்ல எனது அக்கா ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் படித்ததால் அவள் மூலம் ஆங்கில நாவல்கள் படிக்க கிடைத்தன. அப்பப்போ வீட்டில் போராடி, கெஞ்சி கூத்தாடி வாங்கிய ராணி காமிக்ஸ் போன்ற புத்தகங்களும் நான் முதன் முதல் படித்த புத்தகங்களுள் அடங்கும். ஆனால் என்றுமே புத்தகங்களின் பால் ஒரு ஈடுபாடு இருந்தே வந்துள்ளது.

எனது உண்மையான வாசிப்பு அனுபவங்கள் தொடங்கியது கல்லூரியில் தான். நான் பள்ளிக்காலங்களில் படித்த மேற்சொன்ன புத்தகங்களின் மூலமாகவே கல்கி பற்றி தெரிந்து வைத்திருந்தேன். கல்லூரியில் உடன் படித்த மாணவி ஒருத்தியின் மூலம் சிவகாமியின் சபதம் அறிமுகம் ஆனது. அதன் பிறகு வீட்டில் செலவுக்கு தந்த பைசாவில் மிச்சம் செய்து புத்தகங்கள் வாங்கி, நண்பர்களிடத்தில் வாங்கி என்று சில கல்கியின் நாவல்களும், சாண்டில்யன் நாவல்களும் படித்து முடித்தேன். சென்னையில் வந்து படித்ததால் செலவுக்கு மாசமாசம் பணம் கிடைத்தது வசதியாக இருந்தது. அப்படி பட்ட ஒரு சமயத்தில் தான் சென்னையில் புத்தக கண்காட்சி நடப்பதாக தெரிய வந்தது. 2002 ம் வருடம் என நினைக்கிறேன், அப்போது புத்தக கண்காட்சி காய்தேமில்லத் கல்லூரியில் நடந்தது. அங்கு தான் எனக்கு பெரியார் அறிமுகம் ஆனார். அவரை பற்றி கேள்விப்படிருந்தேனே ஒழிய அவரை படிக்க தேடியது கூட இல்லை. ஆனால் அந்த புத்தக கண்காட்சியில் யாருமே இல்லாமல் வெறிச்சோடிய நிலையில் இருந்த கடையை பார்த்தவுடன் அப்படி என்ன தான் இருக்கிறது அவரின் எழுத்தில் என எனக்குள் ஒரு குறுகுறுப்பு. அந்த நாள் கட்டாயம் என் வாழ்கையை சரியான பாதையில் செலுத்த நான் முனைந்த முதல் நாள். அதன் பிறகு எந்த ஒரு புத்தக திருவிழாவிலும்( மூன்றுக்கு தான் சென்றுள்ளேன்) சுயமரியாதை பதிப்பக கடையை பார்க்காமல் வந்தது இல்லை.

அந்த சமயத்தில் எனக்கு பெரிதாக இலக்கிய ஆர்வம் இருந்தது இல்லை. ஆனால் பிறகு வேறு ஒரு நண்பரின் மூலம் அனந்த விகடனும், அதன் மூலம் பல இலக்கிய நூல்களும் எழுத்தாளர்களும் அறிமுகமாயினர். அதன் பிறகு நான் சென்ற புத்தக கண்காட்சிகளில் நூல்களை தேடி தெரிவு செய்து வாங்கியிருக்கிறேன். அதே போல் வேலைக்கு செல்ல ஆரம்பித்த பின்னும் அதற்கு சற்று முன்னும், சென்னையில் லேண்ட்மார்க் மாற்றும் கிக்கின் போதம்ஸ் புத்தக கடைகளில் சென்று புத்தகங்கள் வாங்குவது வழக்கமாக ஆனது.

நான் இதுவரை படித்த புத்தகங்களுள் எனக்கு மிகவும் பிடித்த, என்னை பாதித்த புத்தகங்களில் சில
  1. பொன்னியன் செல்வன் - கல்கி
  2. glimpses of world history - நேரு
  3. கடல் புறா- சாண்டில்யன்
  4. துணையெழுத்து - எஸ். ராமகிருஷ்ணன்
  5. உப பாண்டவம் - எஸ். ராமகிருஷ்ணன்
  6. தண்ணீர் தேசம் - வைரமுத்து
  7. என் பெயர் ராமசேசன்- ஆதவன்
மேலே குறிப்பிடப்படிருப்பது கட்டாயமாக தர வரிசை இல்லை.

இந்த புத்தக கண்காட்சிக்கும் வர வேண்டும் என்பது எனது ஆசை. ஆனால் இப்போது சொந்த ஊரில் இருப்பதால் வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு வர முடியுமா என தெரியவில்லை.